Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு முகாம்

செப்டம்பர் 28, 2023 11:51

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், அரியூர்நாடு ஊராட்சியில், இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தருமபுரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் ஆகியவை இணைந்து நடத்திய மக்கள் நலத் திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து மாதம் ஆகியவை குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கொல்லிமலை வட்டம் அரியூர்நாடு ஊராட்சி தெம்பலம் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் சி. நாகலிங்கம் தலைமை வகித்தார். 
நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு ஊட்டச்சத்து அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சிறுதானிய ஆண்டு ஊட்டச்சத்து அவசியம் குறித்து விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது. சிறந்த ஊட்டச்சத்து தூய்மைப் பணிகளை மேற்கொண்ட தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநர் டாக்டர் ஆர். வாசுதேவன் தொடங்கி வைத்து பேசுகையில், காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய மாநில அரசுகள் பெருமளவிலான முயற்சிகளை எடுத்து, அரசு மருத்துவமனைகளில் காச நோய்க்கான சிகிச்சைகளை வழங்கி வருகின்றன. 60% காச நோய் ஊட்டச்சத்து குறைபாட்டால் மட்டுமே உருவாகிறது. எனவே ஊட்டச்சத்து மிக்கவர்களாக நாம் இருந்தால் காச நோய் ஆஸ்துமா போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை, இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தருமபுரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலக விளம்பர அலுவலர் பிபின் எஸ். நாத் வரவேற்று நோக்கவுரையாற்றிப் பேசுகையில் மத்திய - மாநில அரசு திட்டங்களில் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மலை கிராமங்கள் & குக்கிராமங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு (2023) சர்வதேச சிறுதானிய ஆண்டாக அரசு அறிவித்து சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வருகிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சிறுதானிய உணவுகள் அன்றாட உணவில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ப.சரவணன், ஆ.தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் P.T.இராஜேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஊட்டச்சத்து என்பது அனைவருக்கும் தேவையானது ஆகும்.

குறிப்பாக சிறு குழந்தைகள், வளரிளம் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊட்டச்சத்து அவசியத்தை உணர்ந்து, பெற்றோர்கள் அவர்களுக்கு ஊட்டச்சத்தினை தொடர்ந்து வழங்க வேண்டும். இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக கூறினார். 

இதனைத் தொடர்ந்து கொல்லிமலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கா.சு.தீபன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ப.மணிகண்டன், கொல்லிமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வி.வள்ளிநாயகி ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில் கொல்லிமலை மலைவாழ் மக்கள், அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்